புலிகளை அழிக்க தமிழர்களை ஒழிப்பதை ஏற்க முடியாது: பிரணாப் முகர்ஜி

இலங்கை விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது. தற்போது இலங்கைக்கு என்ன தேவை என்றால் அமைதியான முறையில், அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைதான்.
ஒன்றுபட்ட இலங்கை என்ற வட்டத்திற்குள், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களை மதிக்கும் வகையிலான தீர்வுதான் இப்போைதய தீர்வு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், ஜனநாயக நடைமுறைகளை ஏற்படுத்த இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியா பாராட்டுகிறது, ஆதரவு தெரிவிக்கிறது.
இலங்கையில் எடுக்கப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கையில் அப்பாவிகள் சிக்கி பலியாவதும், உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டு வருவதும் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. தமிழர்களின் நலனையும், உயிரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் போய்ச் சேருவதை உறுதி செய்யுமாறும் இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இலங்கை தூதர் வருகிறார்:
தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என இந்திய அரசுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகரும், எம்.பியுமான பசில் ராஜபக்சே விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார்.
இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் இலங்கை அரசிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளது. இதுதொடர்பாக நடைமுறைக்கு சாத்தியமான தீர்வு குறித்து இரு அரசுகளும் விவாதித்துள்ளன.
அதேசமயம், சர்வதேச கடல் எல்லையை தாண்டாமல் இருக்க வேண்டியது நமது மீனவர்களின் கடமையாகும். சர்வதேச எல்லையை நாம் மதிக்க வேண்டும். அதேபோல எல்லை தாண்டி விடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடோ அல்லது தாக்குதலோ நடத்தக் கூடாது என இலங்கை கடற்படையையும் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications