தமிழக எம்பிக்கள் அமளி-அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிடக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
மக்களவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறிவித்தார். அப்போது பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள் எழுந்து, இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களுக்கு திமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் சபாநாயகர் இருக்கையை நோக்கி அவர்கள் சென்றனர். சபையின் மையப்பகுதியில் நின்று கோஷமிட்டனர்.
அப்போது மும்பையில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில்...:
அதே போல ராஜ்யசபாவிலும் இலங்கை பிரச்சினை எழுப்பப்பட்டது. அவை கூடியதும் இலங்கை தமிழர் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக, பாமக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
தமிழர்களை காப்பாற்றுங்கள்', இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களையும் அவர்கள் காட்டினர்.
அப்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜக ஆகியவை மும்பை தாக்குதல் சம்பவத்தை எழுப்பியதால் அவையில் அமளி ஏற்பட்டது. எனவே, ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மக்களவையில் நேற்றிரவு இலங்கை பிரச்சனை தொடர்பாக விரிவான விவாதம் நடந்தது. அதில் திமுக, பாமக எம்பி்க்கள் பங்கேற்றுப் பேசினர்.
இலங்கையில் போரை உடனே நிறுத்த வேண்டும், தமிழர்களுக்கு உடனே நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும், இலங்கை விமானப் படை பைலட்டுகளுக்கு பயிற்சியளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரினர்.
இந்த விவாதம் நடந்தபோது திமுக, பாமக எம்பிக்கள் உள்பட வெகு சிலரே அவையில் இருந்தனர். இதனால் அவையே காலியாகக் காணப்பட்டது.