2 இலங்கை கப்பல்கள் மீது புலிகள் தற்கொலை தாக்குதல்
வடக்குப் பகுதியின் தமிழ் மக்களுக்கு இந்தக் கப்பலில் உணவு, மருந்துகள் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதைத் தடுக்கவே புலிகள் தாக்கியதாகவும் இலங்கை கடற்படை கூறியுள்ளது.
ஆனால், இந்தக் கப்பல்களில் கடற்படையினரும் ஆயுதங்களும் கொண்டு செல்லப்பட்டதாக புலிகள் தரப்பு கூறுகிறது.
இலங்கையின் வடக்குக் கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.10 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது. ருகுனா, நிமலவா என்ற இரு கப்பல்களையும் 3 படகுகளில் வந்த தற்கொலைப் படை புலிகள் தாக்கினர்.
இதில் உடலில் குண்டுகள் கட்டியபடி வெடித்த விடுதலைப் புலி ஒருவர் பலியானார். இந்த வெடிப்பில் நிமலவா கப்பல் பெருத்த சேதமடைந்தது.
இதையடுத்து கப்பலுக்கு பாதுகாப்பாக அதில் சென்ற கடற்படையினர் நடத்திய தாக்குதலில் படகுகளில் இருந்த புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு படகு கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல்களில் வட பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உணவும், மருந்துகளும் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதைத் தடுக்கும் விதத்திலேயே புலிகள் தாக்கியதாகவும் கடற்படையின் செய்தித் தொடர்பாளரான திஸ்ஸநாயகே கூறினார்.
ஆனால், அந்தக் கப்பல்களில் கடற்படையினரும் ஆயுதங்களுமே இருந்ததாக புலிகள் தரப்பு கூறுகிறது.
கப்பல் சேதமடைந்ததில் ஏதாவது உயிர்ப் பலி ஏற்பட்டதா என்பது குறித்து கடற்படை தரப்பில் தகவல் இல்லை.