போரை நிறுத்த மன்மோகன் சொல்லவில்லை: ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங் என்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை. அப்படி ஒரு கோரிக்கையையும் அவர் வைக்கவில்ைல என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை ராஜபக்சே சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய பிரதமர் மன்மோகன்சிங், என்னுடன் தொலைபேசியில் பேசியபோது, விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு சொல்லவில்லை. அதேபோல இந்தியா சார்பில் வேறு யாரும் சொல்லவில்லை.
இந்தியாவில் கூட்டணி ஆட்சி இருப்பதால், அதன் அரசியல் நிர்ப்பந்தத்தை நான் அறிவேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் பலவிதமான கருத்துகள் எழுவது சகஜம்தான்.
தற்போது நடக்கும் தாக்குதல் விடுதலைப்புலிகள் மீது மட்டுமே என்று மன்மோகன்சிங்கிடம் தெளிவுபடுத்தி விட்டேன்.
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட எண்ணத்துக்கு மாறாக, விடுதலைப்புலி கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு உணவு பொருள்களை அனுப்பி வருகிறோம். அதில் விடுதலைப்புலிகளுக்கும் உணவு போய்ச் சேர்ந்த போதிலும், நாங்கள் தொடர்ந்து உணவு அனுப்புவோம்.
இந்தியாவுடனான உறவு நட்புரீதியானது, வலிமையானது. தேவைப்படும் போதெல்லாம் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது என்றார் அவர்.
முன்னதாக, தேசிய ஆராய்ச்சி கவுன்சில் கூட்டத்தில் ராஜபக்சே பேசுகையில், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, பல ஆண்டுகளாக உரிமைகளை இழந்து வாடும் தமிழ் மக்களுக்கு விடுதலை அளிப்பதற்காகவே, தற்போது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலின்போது, அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்.
சண்டையின்போது, அப்பாவி மக்களுக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படுவதை தவிர்க்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அப்பாவி மக்களுக்கு ஒரு கீறல் கூட ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, கட்டுப்பாட்டுடன் ராணுவம் போரிட்டு வருகிறது.
மனிதாபிமான நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றும் இத்தகைய ராணுவத்தை பெற்றிருப்பதற்கு நாம் பெருமைப்படுகிறோம்.
இந்த சண்டையில் அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் ராணுவம் போரிட்டு வருவதால்தான் கிளிநொச்சியை கைப்பற்றும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே.
கிளிநொச்சியை நெருங்கும் ராணுவம்:
இந்த நிலையில், கிளிநொச்சியை மேலும் நெருங்கி விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. கூடுதலாக ஒரு கி.மீ. நிலப்பரப்பை கைப்பற்றியதாக அது தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியை கைப்பற்ற இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர் தாக்குதல் மற்றும் மழையையும் மீறி, கிளிநொச்சியை மேலும் நெருங்கி விட்டதாக இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி அருகே உள்ள வன்னேரிகுளம் தெற்கு பகுதியில் மேலும் ஒரு கி.மீ. நிலப்பரப்பை கைப்பற்றி இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
நாச்சிகுடா, அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ராணுவம் ஊடுருவி சென்று இருப்பதாக கூறியுள்ளது.
வன்னேரிகுளத்தில் விடுதலைப் புலிகளின் 2 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
முல்லைத் தீவில் புலிகளின் தாக்குதல் முயற்சியை ராணுவத்தின் 59வது படைப்பிரிவு முறியடித்தது. அங்குள்ள ஆண்டான்குளத்தில் விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளும், பீரங்கி மேடையும் அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மந்தன் பகுதியில் அதிகாலை நேரத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். கிளிநொச்சியின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் தீவிர சண்டை நடந்து வருகிறது. இது ஜெயபுரம் மற்றும் மண்ணியன்குளம் பகுதிகளுக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முல்லைத்தீவில் ஆண்டான்குளம் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 310 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து ராணுவம் அகற்றியது. அக்கராயன்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன 3 ராணுவ வீரர்களின் உடல்கள் நேற்று சிக்கின.
அதே பகுதியில் 2 விடுதலைப் புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. பல்லவராயன்காடு பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு விடுதலைப் புலி உடலும், ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications