மின்வெட்டு: கண்டித்து 6 லட்சம் சிறு தொழிற்சாலைகள் இன்று கதவடைப்பு!!
சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள 6 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இன்று கதவடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் 78 தொழிற்பேட்டைகளில் ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இவற்றின் உற்பத்திதான் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
குறுந்தொழில் நிறுவனங்களில் உரிமையாளர் தவிர ஓரிருவர் மட்டுமே பணியாற்றுவார்கள். எனவே, தங்கள் வேலைக்கு ஏற்ப எந்த நேரத்திலும் அந்த நிறுவனங்கள் இயங்கும்.
இப்போது 10 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதால், குறுந்தொழில்கள் கடுமையாக பாதித்துள்ளன. திருப்பூர் மற்றும் மதுரையில் ஆயிரக்கணக்கான குந்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
நாமக்கல் மற்றும் கோவை பகுதியில் மோட்டார் பம்ப், பவுண்டரீஸ் நிறுவனங்களும் கடுமையாக பாதித்துள்ளன.
இதனால், மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 6 லட்சம் நிறுவனங்களும் இன்று ஒரு நாள் கதவடைப்பு செய்கின்றன. இதனால், 50 லட்சம் பேர் சம்பளம் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை இழக்கின்றனர்.
தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் சங்க (டான்ஸ்டியா) தலைவர் காந்திகுமார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக, சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் ஒரு மாதம் நீடித்தால், ஆயிரக்கணக்கான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காத நாட்களில், தொழிலாளர்களுக்கு சம்பளத்தை ரத்து செய்ய தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
அலுமினியம் உருக்காலை, பிளாஸ்டிக் வார்ப்பாலை ஆகியவற்றுக்கு தொடர்ந்து மின்சாரம் தேவை. இந்த வகையான சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். சிறு, குறுந்தொழில் உரிமையாளர்கள் வாங்கும் ஜெனரேட்டர்களுக்கு 50 சதவீத மானியம் தரவேண்டும்.
தொழிற்சாலைகளின் ஜெனரேட்டர் தேவைகளுக்கு, எஸ்ஸார் என்ற தனியார் நிறுவனத்தில் வாங்கும் டீசலுக்கு மட்டுமே மதிப்புக்கூட்டு வரி திரும்பத் தரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால், எஸ்ஸார் நிறுவனத்துக்கு மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பெட்ரோல் நிலையங்கள் இல்லை. எப்படி டீசல் வாங்குவது என அங்குள்ள தொழிற்சாலைகள் தவிக்கின்றன. எனவே, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் மூலம் தட்டுப்பாடின்றி டீசல் வழங்கவும், அதற்கான மதிப்புக் கூட்டு வரியில் சலுகைத் தொகையை உடனடியாக திரும்பப் பெறவும் வழி செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுதொழில் சங்கங்களும் நாளை கதவடைப்பு செய்ய முடிவெடுத்துள்ளன. இதனால், 6 லட்சம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும், என்று கூறியுள்ளார்.