சோமாலியா: இந்திய கப்பல்-மாலுமிகள் மீட்பு
மொகாதிஷு: சோமாலியாவில் கடத்தப்பட்ட இந்திய கப்பலையும், அதில் இருந்த 13 மாலுமிகளையும் கடத்தல்காரர்கள் விடுதலை செய்துள்ளனர்.
சோமாலியா கடற்பகுதியில் அடிக்கடி கடற்கொள்ளையர்கள் கப்பல்களை கடத்துவதும், மாலுமிகளை சிறைபிடிப்பதுமாக அட்டகாசம் செய்து வருகின்றனர். இவர்களில் அடிக்கடி இந்தியர்களும் சிக்கிக் கொள்கின்றனர்.
இதையடுத்து இங்கு ரோந்துக் கப்பலை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று இந்தியக் கப்பல் ஒன்றை கடற் கொள்ளையர்கள், கடலோரப் பாதுகாப்புப் படையினர் உடையில் வந்து கடத்திச் சென்றனர். அக்கப்பலில் 13 மாலுமிகள் இருந்தனர்.
கப்பலில் இருந்தவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். அவர்கள் கடற் கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். கடும் சண்டைக்குப் பின்னர் நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர். நான்கு பேர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து கப்பலும், அதில் இருந்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 13 பேரும் காயமின்றி தப்பியதாக சோமாலியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் 18 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எம்.வி. ஸ்டோல்ட் வேலர் என்ற கப்பல் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதில் உள்ளவர்களின் நிலையும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications