ரூ. 196.37 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - தமிழக அரசு
சென்னை: சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கியிருந்த ரூ. 196.37 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன்தள்ளுபடி தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி பல்ேவறு விவசாய அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை வளாகம் - திருத்த மதிப்பீடு
மேலும், சென்னை நகரில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிஎம்பி இன்டர்நேஷனல் நிறுவனம் கட்டவுள்ள புதிய சட்டசபை வளாகத்திற்கான திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக்கும் நிர்வாக ரீதியிலான ஒப்புதலை அமைச்சரவை இன்று அளித்தது.
இ ஸ்டாம்பிங்
இதுதவிர போலி முத்திரைத்தாள் நடமாட்டத்தை ஒழிக்கும் வகையில், குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் இ - ஸ்டாம்பிங் முறையை சோதனை ரீதியில் அமல்படுத்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்திய ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications