சங்கரராமன் கொலை வழக்கு-நவ21க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கை நவம்பர் 21ம் தேதிக்கு புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இன்று இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் மீதும் குற்றச்சாட்டைப் பதிவு செய்வது தொடர்பாக அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் லட்சுமண ரெட்டி, வரதராஜன், பிரகாஷ் ஆகியோர், முன்பு பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களில் பல ஓட்டைகள் உள்ளன.
அனைவர் மீதும் ஒரே மாதிரியாக குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்குப் பதில், ஒவ்வொரு குற்றவாளிக்கும் தனித் தனியாக குற்றச்சாட்டைப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸின் கருத்தை அறிந்த நீதிபதி, குற்றச்சாட்டை தனித் தனியாக பதிவு செய்ய ஒப்புக் கொண்டார். பின்னர் வழக்கு நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், நவம்பர் 21ம் தேதி ஜெயேந்திரர், விஜயேந்திரர், தில் பாண்டியன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது 24 பேரில் 13 பேர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.