ராஜுக்கு எதிராக பீகாரில் பந்த்- வன்முறை
பாட்னா: பீகாரில் இன்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்திருந்த 24 மணி நேர பந்த்தின்போது மாணவர்கள் பெருமளவில் வன்முறையில் இறங்கினர்.
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் தொடர்ந்த வட இந்தியர்களைத் தாக்கி வருவதைக் கண்டித்து 24 மணி நேர பந்த்துக்கு மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்த பந்த்திற்கு பீகாரில் ஓரளவே ஆதரவு காணப்பட்டது. தர்பங்கா ரயில் நிலையத்தில் இன்று காலை புகுந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ராஜ் தாக்கரே கட்சிக்கு எதிராக கோஷமிட்டபடி ரகளையில் இறங்கினர்.
ரயில்வே ஸ்டேஷன்மாஸ்டர் அறையை அவர்கள் அடித்து நொறுக்கினர். டிக்கெட் கவுண்டர்கள், பிளாட்பார்ம் ஷெல்டர்களையும் அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
தீவைப்பிலும் அவர்கள் ஈடுபட முயன்றனர். ஆனால் ரயில்வே போலீஸார் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து வெளியேற்றினர்.
போலீஸாரையும் மாணவர்கள் தாக்க முயன்றபோது போலீஸார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் 4 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக டோனார் செளக் பகுதியில், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மாணவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ரயில் போக முடியவில்லை.
இதேபோல, மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் பேட்டியா என்ற இடத்தில், டெல்லி - முசாபர்பூர் இடையிலான சப்தகந்தி எக்ஸ்பிரஸ் ரயிலும் மறிக்கப்பட்டது.
பாலியா என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையத்தையும் மாணவர்கள் தாக்கி சேதப்படுத்தினர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை
தலைநகர் பாட்னாவில் அமைதி நிலவியது. மாநிலம் முழுவதும் பெரும்பாலும் அமைதி காணப்பட்டது. பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தலைநகர் பாட்னா உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. கல்வி நிறுவனங்களும் திறந்திருந்தன. பஸ் போக்குவரத்திலும் பாதிப்பில்லை. சாலைகளில் வழக்கமான போக்குவரத்து காணப்பட்டது.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்த பந்த்துக்கு லாலு பிரசாத் யாதவின்ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதாதளம், லோக் தந்த்ரிக் கட்சி உள்ளிட்டவற்றின் மாணவர் பிரிவுகள் ஆதரவு ெதரிவித்திருந்தன.












Click it and Unblock the Notifications