வைகோ கைதுக்கு தேவே கெளடா கண்டனம்
டெல்லி: பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவெ கெளடா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது வேதனையைத்தான் வைகோ வெளியிட்டிருந்தார். இந்தியாவுக்கு எதிராக அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் உண்மையான தேசபக்தியாளர்.
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள கொள்கைகளைத்தான் அவர் விமர்சித்துள்ளார். வைகோ மட்டும் இப்படிப் பேசவில்லை. ஆனால் அவரை மட்டும் தமிழக அரசு குறி வைத்திருப்பது வியப்பளிக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடந்துள்ள இந்த நிகழ்வுகள் தேர்தலில் எதிரொலிக்கும்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை. இதை நான் கண்டிக்கிறேன். தமிழக அரசு இதுபோன்ற ஜனநாயகமற்ற நடவடிக்கைகளை திருத்திக் கொள்ள தாமதமின்றி முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் கெளடா.