நீதித்துறையில் இடஒதுக்கீடு-பாஸ்வான் கோரிக்கை
சென்னை: நீதித்துறையிலும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் அயோத்திதாச பண்டிதர் உருவச்சிலை திறப்பு நடைபெற்றது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கிய இந்த விழாவில் அயோத்திதாச பண்டிதர் உருவச்சிலையை திறந்து வைத்து மத்திய இரும்பு, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்து அமைப்புகள் நாட்டில் அமைதியை சீர்குலைத்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பெண் சன்யாசி இருந்தது தெரியவந்துள்ளது.
மராட்டியத்தில் பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் முன்பு தென்னிந்தியர்கள் மீது வெறித் தாக்குதல் நடத்தினர். இப்போது வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
ஆர்எஸ்எஸ், சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் நலனை எதிர்ப்பவர்கள் நாட்டின் விரோதிகள். அயோத்திதாச பண்டிதர் தபால்தலையை வெளியிட வேண்டும்.
நீதித்துறை, தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாட்டின் அனைத்து தலித் தலைவர்களையும் அழைத்து அடுத்த மாதம் 3ம் தேதி கருத்தரங்கு நடத்தவுள்ளேன் என்றார்.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
பாமகவுக்கும், விடுதலை சிறுத்தை கட்சிக்கும் கருத்து, கொள்கை அளவில் முரண்பாடு இல்லை. ஒத்தக்கருத்துடன் இருக்கிறோம். தமிழனின் ஓட்டை வாங்கி அதிகாரத்தை சுவைக்கும் சிலர் சிங்கள அரசுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். தமிழனுக்கு எதிராக பச்சை துரோகம் செய்கிறார்கள்.
தமிழருக்கு தலைமை தாங்கி ஓட்டை பெறுபவர்கள் மனித சங்கிலியை புறக்கணிக்கிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜக தலைவர் இல.கணேசன், நடிகர் (விஜய்காந்த்) ஆகியோர் புறக்கணித்தனர். அவர்கள் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்புமணி பேசுகையில்,
தமிழக அரசுக்கும் எனக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தியாவில் தமிழகம் தான் சுகாதாரத்துறையில் முதலிடம் வகிக்கிறது. எங்களுக்கு நிலம் கொடுத்து ஒத்துழைத்தால் உலகத்தர மையங்களை ஏற்படுத்துவோம். எனவே, தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.