மனித சங்கிலிக்கு பெருமை சேர்த்த மழை-கருணாநிதி
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு மேலும் பெருமை சேர்த்தது மழை தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறி்க்கை:
கேள்வி: கொட்டும் மழையிலும் மனிதச் சங்கிலி பெரு வெற்றி பெற்றதைப் பற்றி?
பதில்: மனிதச் சங்கிலிக்கு மேலும் பெருமை சேர்த்தது மழை தான். அதனால் "மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்'' என்போம். 21ம் தேதி மனித சங்கிலி நடத்துவதாக இருந்து பெரு மழை காரணமாக அதனை ஒத்திவைக்க நேர்ந்தபோது, 24ம் தேதியும் மழை பெய்தால் என்ன செய்வது, தீபாவளி நெருங்கிவிடுமே என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன.
அதைப் போலவே 24ம் தேதி சரியாக 3 மணிக்கு பெருமழை நகரெங்கும் கொட்டியது.
எனினும், அந்தக் கொட்டும் மழையிலும் தமிழர்கள் கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து, அனைத்துத் தரப்பினர், அனைத்துக் கட்சியினர், வழக்கறிஞர்கள், மாணவ-மாணவிகள், கலை உலகத்தினர் என தமிழர்களின் உணர்வு பட்டுப்போய் விடவில்லை என்பதை மெய்ப்பிக்கின்ற வகையிலே மனிதச் சங்கிலி வெற்றி கண்டுள்ளது. அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: கரும்பு விலையை மத்திய அரசு ரூ.1,550 என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் மாநில அரசு டன் ஒன்றுக்கு 450 ரூபாய் சேர்த்து ரூ.2 ஆயிரமாக அறிவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே, அவருடைய ஆட்சிக் காலத்தில் கரும்புக்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டது?
பதில்: 1999-2000ம் ஆண்டில் திமுக ஆட்சியில் கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை 561 ரூபாய். அப்போது திமுக அரசு நிர்ணயம் செய்த விலை 740 ரூபாய். டன் ஒன்றுக்கு 179 ரூபாய் அதிகம்.
2000-2001ம் ஆண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை 595 ரூபாய். அந்த ஆண்டு திமுக ஆட்சியில் 8.5 விழுக்காடு சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.775 என்றும், பத்து விழுக்காடு கட்டுமானம் கொண்ட கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1,000 என்றும் விலை நிர்ணயம் செய்தோம்.
அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றார். 2001-2002ம் ஆண்டு மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 620.50 என்று விலை நிர்ணயம் செய்தது. ஆனால் ஜெயலலிதா அரசு ஒரு ரூபாய் கூட அதிகமாக அந்த விலையை அதிகரிக்கவில்லை.
2002-2003-ம் ஆண்டு இங்கே தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியிருந்த போது, மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 695 ரூபாய் என்று நிர்ணயம் செய்த போதும், மாநில அரசு ஒரு ரூபாய் கூட அதிகப்படுத்தவில்லை.
2003-2004-ம் ஆண்டு மத்திய அரசு 730 ரூபாய் என்று நிர்ணயம் செய்த போதும், ஜெயலலிதா அரசு ஒரு ரூபாய் கூட விலையை உயர்த்தவில்லை. 2004-2005-ம் ஆண்டு மத்திய அரசு 745 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தது. அந்த ஆண்டிலும் ஜெயலலிதா அரசு ஒரு பைசா கூட விலையை உயர்த்தவில்லை.
2005-2006-ம் ஆண்டு தான் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மத்திய அரசு 795 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தபோது, தேர்தலை மனதிலே கொண்டு 1,014 ரூபாய் என்று விலையை நிர்ணயம் செய்தார் ஜெயலலிதா.
இந்த அளவிற்கு செயல்பட்ட ஜெயலலிதா தான் தற்போது திமுக அரசைப் பார்த்து விலையை உயர்த்தியது போதவில்லை என்றும் 2000 ரூபாய் என்று நிர்ணயிக்க வேண்டுமென்றும் அறிக்கை விடுகிறார். அதற்கு அவருக்கு ஏதாவது அருகதை உள்ளதா என்பதை கரும்பு விவசாயிகள் தான் கூற வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.