சீமான்-அமீரை விடுவிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: இயக்குனர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி அணிவகுப்பு மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. சென்னையில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு தாம்பரத்தையும், செங்கல்பட்டு நகரையும் தாண்டி நீண்டு நின்றதில் இருந்து இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை காக்க வேண்டும் என்ற உணர்வு தாயகத்து தமிழர்களிடம் பட்டுப் போய்விடவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது.
இந்த அணிவகுப்பில் கண்ட இன உணர்வு ஒருபுறம் மெய்சிலிர்க்க வைத்தாலும், இன்னொருபுறத்தில் இதே உணர்வுடன் அணிவகுப்பில் பங்கேற்ற இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி தமிழின உணர்வாளர்களை மெய்வருத்த செய்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, இலங்கை தமிழர்களின் இன்னல்களை களைவதற்காக இங்கே நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும், நடவடிக்கைகளும் நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நமது தமிழினம் அங்கே அழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது என்பது தவிர்க்க முடியாது என்பதையும் எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள்.
பேச்சு என்பது வேறு, நடவடிக்கைகள் என்பது வேறு. எனவே ராமேசுவரத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள் என்பதற்காக இயக்குனர்கள் சீமானையும், அமீரையும் கைது செய்துள்ள நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கைதாகியுள்ள இருவருக்கும் எத்தகைய அரசியல் ஈடுபாடும் இல்லை.
எனவே அவர்களது பேச்சில் அரசியல் நோக்கம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அத்துடன் இந்திய இறையாண்மையிலும், ஒருமைப்பாட்டிலும் தங்களுக்குள்ள நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதுடன் அவற்றிற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இவற்றையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே போன்று மதிமுக தலைவர்கள் இருவர் இதே குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்பு இதே குற்றத்திற்காக மதிமுக பொதுசெயலாளர் வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டதை பலரும் அப்போது எதிர்த்து வந்திருக்கிறார்கள்.
அவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருந்ததை கண்டித்து கையெழுத்திட்டவர்களில் இன்று மத்திய அரசில் காங்கிரஸ் கட்சி சார்பில் மந்திரிகளாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த இருவரும், அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும் உள்ளனர் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்டுவதில் தவறேதும் இல்லை. இப்படி நினைவூட்டுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
எனவே மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார்கள் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் கைது நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய முன் வரவேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications