கோவை, ஈரோடு பிரிப்பு- திருப்பூர் மாவட்டம் உதயம்
தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்று கோவை. தற்போது இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. கூடவே ஈரோடு மாவட்டமும் பிரிக்கப்பட்டு புதிதாக திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி திருப்பூர் தனி மாவட்டமாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
கோயம்பத்தூர், ஈரோடு ஆகிய 2 மாவட்டங்கள் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட கோயம்பத்தூர் மாவட்டம், ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட ஈரோடு மாவட்டம், திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட திருப்பூர் மாவட்டம் என பிரிக்கப்படுகிறது.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தாலுகாக்களும், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், பவானி ஆகிய தாலுகாக்களும் அடங்கும்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை (கோவையிலிருந்து), தாராபுரம், காங்கேயம் (ஈரோட்டிலிருந்து) ஆகிய 6 தாலுகாக்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
32வது மாவட்டம்:
திருப்பூர், தமிழகத்தின் 32வது மாவட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் சிறப்பு அலுவலராக உடனடியாக நியமிக்கப்படுகிறார். உடனடியாக அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
புதிய நிர்வாகத்திற்கு எத்தனை அதிகாரிகள், ஊழியர்கள் தேவைப்படுவர் என்பது குறித்து அவர் அரசுக்குப் பரிந்துரைப்பார். முதல் கட்டமாக திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கும். பின்னர் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.
மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், முக்கியப் பிரமுகர்களை அழைத்துச் செல்லவும் தலா ஒரு அம்பாசடர் கார் ரூ. 10 லட்சம் செலவில் உடனடியாக வாங்கப்படவுள்ளது.