இனி தமிழக மீனவர்களை சுட மாட்டோம்: இலங்கை
டெல்லி: சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வரும் தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தாது என்று இலங்கை உறுதியளித்துள்ளது.
இலங்கை அதிபரின் தம்பியும், சிறப்புத் தூதருமான பாஸில் ராஜபக்சே நேற்று முன்தினம் டெல்லி வந்திருந்தார். பிரணாப் முகர்ஜி, எஸ்.எஸ்.மேனன் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் இந்தியா-இலங்கை சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமான பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு சர்வதேச எல்லையைத் தாண்டி வரும் இந்திய, இலங்கை மீனவர்களை அணுகுவதற்கு நடைமுறை சாத்தியமுள்ள ஏற்பாடுகளை அமல்படுத்த இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன.
இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர் பாஸில் ராஜபக்சேவின் டெல்லி வருகையின்போது இந்த முடிவு ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதன்படி இலங்கை கடல் பகுதிகளில் சர்ச்சைக்குரிய பகுதிகளை இலங்கை அரசு வரையறுத்து, அதை இந்தியாவுக்கு தெரிவிக்கும். அதன்பிறகு அந்த சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகள் செல்லாது. மேலும் இந்திய மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட மாட்டாது.
இந்திய மீனவர்கள் உரிய அனுமதி பெற்ற படகுகளுடன் மீன் பிடிக்கச் செல்வது என்றும், மீனவர்களுக்கு தமிழக அரசு உரிய அடையாள அட்டைகள் வழங்குவது என்றும் இந்தக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
மேலும் மீன்வளத்துறையில் மேம்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து கடந்த 2005ம் ஆண்டில் இருந்து இந்தியா - இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நடத்துவது என்று இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications