விரைவில் கூடுகிறது சட்டசபை
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை கொளுந்து விட்டு எரியும் நிலையில், தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்குகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மே மாதத்துடன் முடிந்தது. இதையடுத்து விரைவில் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. குறுகிய கால கூட்டத் தொடராக இது அமையும்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, இலங்கைப் பிரச்சினை என பல பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,அரசுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு வாதம் புரிய எதிர்க்கட்சியினர் காத்துள்ளனர்.
மேலும் இதுவரை ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து வந்த பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிர் வரிசையில் இடம் பெற்றுள்ளன. எனவே எதிர்க்கட்சியினரோடு சேர்த்து இவர்களையும் அரசு சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைகோ-கண்ணப்பன் கைது விவகாரத்தை அதிமுக, மதிமுக ஆகியவை பெரிதாக எழுப்பும் எனத் தெரிகிறது. ஏற்கனவே ராம. நாராயணனையும், திருமாவளவனையும் ஏன் விட்டு வைத்திருக்கிறது அரசு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காட்டமாக கேட்டுள்ளார். எனவே அந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுக்கும் எனத் தெரிகிறது.
கூடவே மின் வெட்டுப் பிரச்சினையையும் அதிமுக பெரிதாக கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சில கட்சிகள் செயல்படுவது குறித்து காங்கிரஸ் பிரச்சினை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பை விட இம்முறை பல்வேறு பிரச்சினைகள் அனல் பறக்க காத்துள்ளதால் சட்டசபைக் கூட்டம் படு சூடாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.