ஜெ.வை கைது செய்ய உத்தரவா: டிஜிபி மறுப்பு
சென்னை: ஜெயலலிதாவைக் கைது செய்ய தமிழக அரசு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. வெறும் பரபரப்பு ஏற்படுத்தவே இது தொடர்பாக கற்பனையான அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார் என தமிழக போலீஸ் டி.ஜி.பி கே.பி. ஜெயின் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பத்திரிகைகளுக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில், தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியவர்களைப் கைது செய்ய வேண்டுமென்று கோரியதையடுத்து, பழி வாங்கும் நடவடிக்கையாக தமிழக அரசு தன்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், காவல் துறையினர் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி தன்னைக் கைது செய்ய யோசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.
ஜெயலலிதாவைக் கைது செய்ய தமிழக அரசு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதற்காக உயரதிகாரிகள் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை.
வேண்டுமென்றே திட்டமிட்டு, குழப்பம் விளைவித்து, அதனால் ஒரு பரபரப்பு ஏற்படுத்த, உண்மைக்கு மாறான ஒரு கற்பனை செய்தியை அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
இச்செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.