பசும்பொன்னில் கலவரம்-ஜெ கார் மீது கல்வீச்சு, போலீஸ் மீது தாக்குதல்
தேவர் பெருமகனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீதும் கல்வீச்சு நடந்தது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தேவர் நினைவிடத்திற்கு வந்து மலர் மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தேவர் நினைவிடத்தி்ற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
அவர் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பியபோது திடீரென ஒரு கும்பல் போலீஸார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கத் தொடங்கியது.
ஜெ கார் மீதும் கல்வீச்சு:
இந்த கல்வீச்சில் ஜெயலலிதாவின் காரும் தப்பவில்லை. இந்தக் கலவரத்தையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து உடனே அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து நடந்த கல்வீச்சைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.
அந்த இடமே போர்க்களம் போல மாறியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் தடியடியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தனர்.
நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் பதட்டம் நீடிக்கிறது.
ஸ்டாலின் அஞ்சலி:
முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திமுக சார்பில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், கே.என். நேரு ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் பசும்பொன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில்...:
தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேவரின் திருவுருவப்படத்திற்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை நந்தனத்தில் உள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழ் தேவரின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
படத்திற்கு மத்திய கப்பல், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
அதிமுக சார்பில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் போளூர் வரதன் எம்.எல்.ஏ., முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர்.தியாகராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முளைப்பாரி ஊர்வலம்:
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் அதன் தென் சென்னை மாவட்ட செயலாளர் சி.தங்கராசு பாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சீருடை அணிந்த பெண்கள் முளைப்பாரியுடன் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து தேவரின் திருவடிகளில் முளைப்பாரியை சமர்ப்பித்து பொங்கலிட்டு வழிபட்டனர். தேவர் பேரவையை சேர்ந்தவர்கள் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.