'ஹிண்ட்ராப்': தமிழக கட்சிகள் மெளனம் ஏன்?-பாஜக
சென்னை: மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஹிண்ட்ராப் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதை பாஜக தவிர வேறு எந்த கட்சியும் கண்டிக்கவில்லை என அக் கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் தங்கி உள்ளனர். இதை உள்நாட்டு பிரச்சினை என்று ஒதுக்கிவிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான அதிகாரம் இந்திய அரசுக்கு உள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு தற்போது நிவாரண பொருட்கள், தமிழக அரசால் சேகரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்த நிவாரண பொருட்கள் உண்மையிலேயே போய் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
சுனாமி நேரத்தில் நாம் கொடுத்த நிவாரண பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு போய்ச் சேரவில்லை. எனவே தற்போது அனுப்ப இருக்கும் நிவாரண பொருட்கள் போய்ச்சேரும் என்பதை எப்படி நம்புவது. செஞ்சிலுவை சங்கம் மூலமாக நிவாரண பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்குமா?.
நிவாரண பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு போய் சேருகிறதா என்பது தெரியாமல் தமிழக பாஜக நிவாரண உதவிகள் வழங்குவதற்கான முயற்சிகள் எடுப்பதாக இல்லை.
இலங்கையில் தற்போது நடைபெறும் உண்மையான நிலவரம் எதுவும் தெரியவில்லை. எனவே ஐ.நா. சபையின் பார்வையாளர் குழு இலங்கைக்கு சென்று உண்மை நிலையை அறிந்து அதை மக்களுக்கு எடுத்து கூறவேண்டும்.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று தொல்.திருமாவளவன் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஹிண்ட்ராப் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று பாஜக தவிர வேறு எந்த கட்சியும் சொல்லவில்லை என்றார்.