தீவிரவாத பெண் சாமியாருடன் கூட்டு-லெப்டினென்ட் கர்னல் சி்க்கினார்
போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து அந்தஅமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பச்மார்ஹி பகுதியைச் சேர்ந்த ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஒருவர் மகாராஷ்டிர போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.
அவருக்கும்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த அதிகாரியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உடனடியாக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பெண் சாமியாருக்கு சீட்-உமா பாரதி:
இதற்கிடையே பெண் சாமியார் பிரக்யா சிங்கு விரும்பினால், மத்திய பிரதேசத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படு்ம் என உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது.
பிரக்யா ஒரு அப்பாவி. சாமியார்களின் புகழைக் கெடுக்கவும், அரசியல் உள்நோக்கம் காரணமாகவும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் விரும்பினால் மத்திய பிரதேசத்தில் போட்டியிடலாம். அவரை பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவருக்கு எதிராக நிறுத்துவோம் என அந்தக் கட்சி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications