நாளை உண்ணாவிரதம்: தாக்கி பேசக்கூடாது-சரத்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரதத்தில் சட்டத்திற்கு புறம்பாகவோ, தனிப்பட்ட முறையிலோ யாரையும் தாக்கி கலைஞர்கள் பேசக் கூடாது என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டும், தங்களுடைய உணர்வை பதிவு செய்யும் வகையிலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாளை 01.11.2008 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இதில் கலந்து கொள்ளுமாறு நடிகர்கள் அனைவருக்கும் கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், நேரிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும் இதில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரம்மாண்டமான பந்தல், மேடை மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருப்பவர்களை பொது மக்கள் பார்த்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அபிபுல்லா ரோடு பிரதான சாலை வழியாக உள்ளே வந்து வித்யோதயா 1-வது தெரு வழியாக வெளியே செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய மனு கொடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேச வேண்டுமே தவிர சட்டத்திற்கு புறம்பாகவோ, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் விதமாகவோ பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே போன்று விருப்பம் போல் நிவாரணத்திற்கு நிதி அளித்து உதவ வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிதி அளிக்க விரும்புவோர் Srilankan Tamil Relief Fund என்ற பெயருக்கு காசோலை அல்லது டிடி எடுத்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, பெப்சி, திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் என அனைரையும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
முன்னதாக, மைக் கட்டி பேசவதையே ஒட்டுமொத்தமாக தவிர்த்து விடலாம் என கமல்ஹாசன் தெரிவித்த யோசனைக்கு ஒப்புதல் தெரிவித்த சரத்குமார், பின்னர் அனைத்துக் கலைஞர்களுடனும் கலந்து பேசியபின், நிபந்தனையோடு கூடிய பேச்சுக்கு அனுமதி தருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications