பிரச்சனையை திசை திருப்பிவிட்டனர்-ராமதாஸ்

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் 60,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,800க்கும் மேற்பட்ட கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. 5 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இது 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை.
இப்போதைய நிலைமை அதைவிட மிக மோசமாக உள்ளது. அங்கு தமிழர்கள் கொல்லப்படும் போதும் தமிழ்பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் போதும் நமது உணர்வு பொங்கி எழுகிறது, உடனே அது அடங்கி விடுகிறது.
கடந்த மாதம் நடந்த நிகழ்வுகளும் அப்படித்தான். 14ம் தேதி கோட்டையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.2 வாரத்துக்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறுநாளே அந்த தீர்மானத்தை பிரதமரிடம் அமைச்சர் பாலு கொடுத்தார். 24ம் தேதி மனித சங்கிலி நடந்தது.
அன்று முதல்வர் பேசுகையில், நாம் நம்பிக்கை கொள்ளும் வகையில் பிரதமர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளார் என்றார். அன்று முதல் வேகம் குறையத் தொடங்கியது.
26ம் தேதி பிரணாப் முகர்ஜி வந்தார். மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அன்றோடு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
27ம் தேதி இலங்கை தமிழர்களுக்கு உதவ நிவாரண நிதி திரட்டப் போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். நிதி திரட்டுவது தவறு இல்லை. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதை ஆதரிக்கிறோம்.
ஆனால், நிதி திரட்டுவது மட்டுமே தீர்வாகிவிடுமா?. நிவாரண நிதி வசூல் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினையையே திசை திருப்பி விட்டனர்.
இதனால் தமிழர்களின் எழுச்சி மழுங்க தொடங்கி இருக்கிறது முழு கவனமும் நிதி வசூலில் முடங்கிக் கிடக்கிறது. போர் நிறுத்த கோரிக்கை பின் தள்ளப்பட்டுவிட்டது.
இலங்கை தமிழர்களுக்கு உண்மையான நிவாரணம் உடனடியாக போர் நிறுத்தம் தான். சண்டை ஓய்ந்து விட்டால் நிவாரணங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள்.
ஆனால், போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவதில் நாம் தோற்றுவிட்டோம். மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?.
அனைத்துக் கட்சி தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதற்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும். வெளிப்படையாகவே மத்திய அரசை கண்டிக்க வேண்டும்.
ராஜபக்சே மீது வழக்கு தொடர ஐ.நா. சபை மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு இந்த பிரச்சனையில் கருணாநிதி இன்னும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications