ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்ட 'ஷூ பாலிஷ்'
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பாப்புராஜ் என்கிற போட்டோகிராபர், இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்ட ஷூ பாலிஷ் போட்டு நிதி சேகரிக்கிறார்.
நெல்லை சாந்திநகரை சேர்ந்தவர் பாப்புராஜ். பட்டதாரி. போட்டோகிரபராக உள்ளார். ஆண்டுதோறும் ஏழை, ஊனமுற்ற குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க வித்தியாசமான முறையில் யாரிடம் பணம் வசூலிக்காமல் நிதி திரட்ட பாப்புராஜ் முடிவு செய்தார்.
நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் துவக்கினார். இப்பணியை வரும் 5ம் தேதி வரை மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
தினமும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஷூ பாலிஷ் போடும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.
முதல்நாளான அவருக்கு ஷூ பாலிஷ் போட்டதில் ரூ.300 கிடைத்தது. 5ம் தேதிக்குள் எப்படியும் அதிக அளவு பணம் வசூலாகிவிடும் என்ற நம்பிக்கை பாப்புராஜூக்கு உள்ளது.
இதுகுறித்து பாப்புராஜ் கூறும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு ஷூ பாலிஷ் போட்டு வருகிறேன்.
என் வழக்கமான பணி பாதிக்காத படி காலையில் மட்டும் ஷூ பாலிஷ் போடுகிறேன். ஷூ பாலிஷ்க்கு அவரவர் இஷ்டப்படி அளிக்கும் பணத்தை பெற்றுக் கொள்வேன். சிலர் 1 ரூபாய் தந்தனர். கண்பார்வையற்ற ஒருவர் 10 ரூபாய் தந்து ஊக்கப்படுத்தினார்.
5ம் தேதி வரை ஷூ பாலிஷ் போட்டு கிடைக்கும் பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்க முடிவு செய்துள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு உதவுவதில் நான் பலருக்கு முன் மாதிரியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
குஜராத் பூகம்பத்திற்கும் இதே போல ஷீ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டு 6 ஆயிரத்து 500 ரூபாய் சேகரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாப்புராஜ் அனுப்பினார். சுனாமி நிவாரண நிதிக்கும் ஷூ பாலிஷ் மூலம் 8 ஆயிரம் ரூபாய் சேகரித்து அளித்தார்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெல்லை ஜங்ஷன் முதல் டவுன் வரை உள்ள கடைகளில் டெலிபோன் சுத்தம் செய்து 2 ஆயிரம் ரூபாய் சேகரித்து அனுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க ஷூ பாலிஷ் போடும் பணியை மேற்கொண்டுள்ள பாப்புராஜ் நெல்லையில் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications