சந்திராயன் அனுப்பிய படங்கள் - கலாம் மகிழ்ச்சி
பெங்களூர்: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்த்ராயன் விண்கலம் முதன்முதலாக பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ள படங்களைப் பார்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சந்தோஷம் தெரிவித்துள்ளார்.
10 நாட்களுக்கு முன் பிஎஸ்எல்வி மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது சந்த்ராயன். இப்போது நிலவுக்கு பாதி வழியில் உள்ள சந்த்ராயன் பூமியை படம் பிடித்து அனுப்ப ஆரம்பித்துள்ளது.
அதில் உள்ள டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது. இந்தப் படம் 19ம் தேதி காலை 8 மணிக்கு எடுக்கப்பட்டது. அப்போது சந்த்ராயன் பூமியிலிருந்து 9,000 கி.மீ உயரத்தில் பறந்தது.
இதையடுத்து 12.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது. அப்போது அது பூமியிலிருந்து 70,000 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
இந்தப் படங்களை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காட்ட அவர் பெரும் ஆர்வத்துடன் அதைப் பார்த்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சந்திராயன் அனுப்பிய படங்களைப் பார்த்து சந்தோஷம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாதவன் நாயர் என்னிடம் காட்டிய படங்ள் மிகவும் சிறப்பானவை. துல்லியமாக உள்ளன.
ஒவ்வொரு இந்தியனும், இந்த வெற்றிக்காக பெருமைப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications