நிவாரண நிதியை சிங்கள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது! சரத்குமார்
சென்னை: தமிழ் மக்கள் மற்றும் நடிகர்களிடம் திரட்டப்பட்ட நிவாரண நிதியை எக்காரணம் கொண்டும் சிங்கள அரசிடம் கொடுக்கக் கூடாது, என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக 46 லட்ச ரூபாய் வசூலானது.
நடிகர்களில் ரஜினி அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கினார். கமல், சிவக்குமார் ஆகியோர் தலா 5 லட்சம் வழங்கினார்கள். சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா 2.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். நடிகர்கள் வழங்கிய நிதியுடன், நடிகர் சங்கத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மொத்தம் 46 லட்சம் ரூபாய் வசூலானது.
இந்த நிதி முழுமையாக நடிகர் சங்கம் சார்பில் முதல்வரிடம் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக ஒப்படைக்கப்படும்.
"இந்த நிதி மக்கள் பணம்தான். ஆனால் கஷ்டப்பட்டதற்காக நடிகர்களுக்கு மக்கள் கொடுத்த பணம். இந்த நிதியை முறையாக, தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்களர்களிடம் கொடுக்கக் கூடாது.
கொடுத்தால், அது தமிழனை அழிக்க ஆயுதம் வாங்க மட்டுமே பயன்படும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன், பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு இந்த நிதியைச் செலவிட வேண்டும்", என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.












Click it and Unblock the Notifications