திட்டமிட்டபடி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஸ்டாலின் உறுதி

கிருஷ்ணகிரி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உள்ளாட்சி தினவிழா ஆகிய ஐம்பெரும் விழா நேற்று காலை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு ரூ.59 கோடியே 59 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.22 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். 3 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 கோடி சுழல்நிதி வழங்கிய பின் அவர் பேசியதாவது:
கடந்த 1996-ம் ஆண்டு முதல் நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சி தினமாக கொண்டாடி வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் அடிப்படை வசதிகளை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் பெரும் பணியாற்றி வருகின்றன.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்க சுத்தமான புளோரைடு கலப்பு இல்லாத காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்ற பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்&அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது இந்த திட்டப்பணிகள் ஒரு நல்ல நிலையை இப்போது எட்டியுள்ளன.
ஆனால், இந்த திட்டத்தை வைத்து நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் அரசியல் நடத்தும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு நான் ஒன்றை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திட்டமிட்டபடி குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நிறைவேற்றப்பட்டு, இந்த மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
பின்னர் தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கினார்.












Click it and Unblock the Notifications