ஜெ மீது மானநஷ்ட வழக்கு-கரூர் நகராட்சி முடிவு
கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது மான நஷ்ட வழக்குத் தொடர் என கரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரூர் நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
கடந்த 29 ஆம் தேதி ஜெயலலிதா வெளிட்டுள்ள அறிக்கையில், கரூர் நகரில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 4.5 கோடி குடிநீர்த் திட்டத்தை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிடப்பில் போட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூருக்கு கடந்த 1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தான் காவிரிக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்பு, அந்த திட்டம் 1996ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ரூ. 3.60 லட்சம் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உண்மை இப்படி இருக்கையில், குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யான தகவல்களை ஜெயலலிதா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்தச் செயல் கரூர் நகர் மன்றத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர கரூர் நகராட்சி ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை கரூர் நகராட்சி வாபஸ் பெற வேண்டும், இல்லையெனில் கரூர் நகராட்சி முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் அணிச் செயலாளர் நாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications