இலங்கை தமிழர் நிதி: ரூ7.5 கோடி குவிந்தது!
சென்னை: இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி ரூ. 7 கோடியே 50 லட்சத்தைத் தொட்டுள்ளது.
இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் அப்பாவி தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழர்கள் வீடுகளையும், பொருட்களையும் இழந்து பட்டினியால் வாடுகிறார்கள். சாலையோரங்களில் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழக அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது.
நடிகர் சங்கம் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியபோது கணிசமாக நிதி குவிந்தது. நடிகர் நடிகைகளும் லட்சக்கணக்கில் நிவாரண நிதி அளித்தனர். இதில் மட்டும் மொத்தம் ரூ.55 லட்சத்து 79 ஆயிரத்து 8 ரூபாய் வசூலானது.
நடிகர்கள் ரஜினிகாந்த் ரூ. 10 லட்சமும், கமல், சிவக்குமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் தலா ரூ. 5 லட்சமும் அளித்தனர்.
இந்த நிதிக்கான காசோலையை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இன்று காலை கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியிடம் நேரில் வழங்கினார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பொருளாளர் கே.என்.காளை மற்றும் மனோரமா, சார்லி, ஸ்ரீப்ரியா, கே.ராஜன், அலெக்ஸ், சத்யப்ரியா, ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரும் சரத்குமாருடன் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications