'ஓவர் லோடிங்': அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: கூடுதல் சுமை ஏற்றிச் சென்றதாக பிடிபட்ட லாரிகள், பஸ்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரத்தை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் போக்குவரத்து ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பொது நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், சென்னை துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பொருட்களை ஏற்றிச் செல்லும் கன ரக வாகனங்கள் மோட்டார் வாகன சட்டத்தை மீறும் வகையில், அதிக சுமையை ஏற்றிச் செல்கின்றன.
இப்படி அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிச் செல்வதால், டயர்கள் வெடிப்பது, பிரேக் டவுன் ஆவது, விபத்துக்கள் ஏற்படுவது, போக்குவரத்து நெரிசல் என ஏற்பட வழி வகுக்கிறது.
அதேபோல, அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் கூட அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பயணிகளையும், சுமைகளையும் ஏற்றிச் செல்கின்றன.
இப்படி கூடுதல் சுமையுடன் செல்லும் வாகனங்கள் குடியிருப்புகள், வணிக பகுதிகள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு போக்குவரத்து ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications