கியூபா மீதான தடைகளை நீக்குவாரா ஒபாமா?

1959ம் ஆண்டில் மக்கள் புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ அதிபராகி கம்யூனிஸ அரசை அமைத்ததில் இருந்தே அமெரிக்காவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையே நல்லுறவு இல்லை.
காஸ்ட்ரோவைக் கொலை செய்ய அமெரிக்க அரசு போட்ட திட்டங்களை கியூபா முறியடித்தது. ஆனால் கடந்த 46 ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளைப் போட்டு கியூபாவின் வளர்ச்சியை முடக்கி வைத்துள்ளது அமெரிக்கா.
அதிலும் ஜார்ஜ் புஷ் அவரது தந்தை சீனியர் புஷ் ஆகியோரின் காலத்தில் தடைகள் மிகவும் கடுமையாயின.
இதனால் வழக்கமாக அமெரிக்காவில் யார் புதிய அதிபரானாலும் கியூபா விமர்சிக்குமே தவிர வரவேற்றதில்லை.
ஆனால், இப்போது புதிய வரலாறாக கருப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராகியுள்ளதை கியூபா வரவேற்றுள்ளது.
அந் நாட்டு முதலீட்டுத்துறை அமைச்சர் மார்த்தா லோமாஸ் கூறுகையில், ஒபாவின் வெற்றி மகத்தானது, அதை கியூபா வரவேற்கிறது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை அவர் நீக்கினால் மகிழ்வோம், அது பெரும் உதவியாக இருக்கும்.
அதே நேரத்தில் தடைகளைத் தொடர்ந்தாலும் கவலையில்லை. அதையும் சந்திக்க நாங்கள் எப்போதும் போல இப்போதும் தயார். எங்கள் பிரச்சனைகளை நாங்கள் தான் தீர்க்க வேண்டும் என்றார்.
அமெரிக்காவில், குறிப்பாக புளோரிடாவில், 15 லட்சம் கியூப மக்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று வரவும், பணம் அனுப்பவும் கூட தடைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்தத் தடைகளை விலக்குவது குறித்து பரிசீலிப்பேன் என ஒபாமா தனது பிரச்சாரத்தின்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கியூப அதிபர் ரவுல் கேஸ்ட்ரோவை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால் ஒபாமாவின் வெற்றி கியூபாவுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
கென்யாவில் கொண்டாட்டம்:
இதற்கிடையே ஒபாமாவின் பூர்வீக நாடான கென்யா அவரது வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது.
அந்த நாடு முழுவதும் ஒபாமாவை வாழ்த்தி பேரணிகள், ஊர்வலங்கள், நடனங்கள் நடந்து வருகின்றன. இன்று தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications