சென்னை: கொரிய சாப்ட்வேர் அதிகாரி தற்கொலை
சென்னை: சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த தென் கொரியாவைச் சேர்ந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
தென் கொரியாவின் உல்சான் நகரைச் சேர்ந்தவர் ரியூ பியாங் சாங். 40 வயதாகும் இவர் சென்னையில் உள்ள ஆட்டோ எவர் சிஸ்டம்ஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்த நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தேவையான சாப்ட்வேர்களை வடிவமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆட்டோ எவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகமும், உற்பத்திப் பிரிவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளன.
நேற்று இரவு சாங், தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிரார்த்தனைக்காக வெளியில் போயிருந்த அவரது மனைவி வீடு திரும்பியபோது கணவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
வேலையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சாங் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது உடலை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் சாங்கின் குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications