மீண்டும் கூட்டணியில் இணைய திமுக அழைக்கிறது: ராமதாஸ்

திமுக கூட்டணியில் இருந்து வந்த பாமக, தொடர்ந்து அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தது. இதற்கு அவ்வப்போது பதிலளித்து வந்த திமுக, வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் பாமக பொருளாளரான காடுவெட்டி குருவின் மிரட்டல் பேச்சைத் தொடர்ந்து கொந்தளித்தது.
இதையடுத்து கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கி திமுக உயர் மட்ட செயல் திட்ட குழு முடிவெடுத்தது. மேலும் காடுவெட்டி குருவும் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது.
இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திடீரென தைலாபுரம் தோட்டம் சென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என அப்போது ராமதாஸிடம், டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டார்.
தங்கபாலுவும் சந்திப்பு:
இந் நிலையில், இன்று சென்னையில் உள்ள பாமகவின் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
அப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குத் திரும்புமாறு தங்கபாலுவும் ராமதாசுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ராமதாசிடம், டி.ஆர்.பாலுவுடனான சந்தி்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ராமதாஸ், டி.ஆர்.பாலு என்னை தைலாபுரம் வந்து சந்தித்தார். பழசெல்லாம் மறந்து விட்டு ஒன்றாக இருக்க வேண்டும். தலைவரை வந்து சந்தியுங்கள், மனம் விட்டுப் பேசினால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.
கருணாநிதியை சந்திப்பேன்:
அவர் பேசியதை நான் கேட்டுக் கொண்டேன். உரிய சந்தர்ப்பம், சூழ்நிலை அமையும்போது முதல்வர் கருணாநிதியை சந்திப்பேன். ஆனால், கூட்டணி குறித்து தேர்தல் நடத்தில் தான் முடிவு செய்யப்படும்.
இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையில் சற்றும் திருப்தி இல்லை என்றார் ராமதாஸ்.
பேட்டியின்போது உடனிருந்த தங்கபாலு பேசுகையில், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாமகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும். காங்கிரஸ் கூட்டணியில் பாமக நீடிக்கும்.
இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வரும்போது, இலங்கைத் தமிழர் விவகாரத்தி், தமிழக மக்களின் கோரிக்கைகளை, உணர்வுகளை, தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சேவிடம் தெரிவிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications