தமிழ் இனப்படுகொலையை இந்தியா ஆதரிக்கிறது-வைகோ

சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள வைகோ, நேற்று மதுரைக்கு வந்தார். மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த மதிமுக எம்.எல்.ஏ. வீர இளவரசனைப் பார்த்து நலம் விசாரித்தார்.
பின்னர் தமிழ்நாடு ஹோட்டலில் தங்கிய அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு மதுரையில் தங்கியிருக்கும் இயக்குநர்கள் சீமானும், அமீரும் சென்று சந்தித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. அப்போது அவர் பேசுகையி்ல், சீமானும், அமீரும் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு எதிராக உறுதியாக போராடும் போராளிகள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
எதிர்காலத்தில் இன்னும் வீரியத்துடனும், வேகத்துடனும் அவர்கள் பங்களிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அண்ணா கண்ட கனவை அவர்கள் நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் வாடும் தமிழர்களுக்காக இங்குள்ள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் இருவரும். அவர்களை தமிழக அரசு கைது செய்திருக்கக் கூடாது. அவர்களது நிபந்தனை ஜாமீன் விலக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலைக்கு மத்திய அரசின் உறுதியான, பூரணமான ஆசி உள்ளது. ஆயுதங்களையும், நிதியுதவியையும் தாராளமாக செய்து தருகிறது மத்திய அரசு.
யாழ்ப்பாணம், பலாலி விமான தளத்தை சீரமைத்துத் தர மத்திய அரசு முடிவு செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு பல தகவல்களைக் கொடுத்து உதவி வருகிறது.
ஈழப் பிரச்சினையில் மத்திய அரசும், மாநில அரசும் தோல்வியுற்றுள்ளதை மறைக்கும் வகையில்தான் 800 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை அனுப்பும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து கண்மூடிப் போக்குடன் இருப்பதைக் கண்டித்து மதிமுக சார்பில் நவம்பர் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications