ராதிகாவுக்குப் பதவி தர சமத்துவ மக்கள் கட்சி கோரிக்கை
சென்னை: நடிகை ராதிகா சரத்குமாரை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் முழுமையான அளவில் ஈடுபடுத்த வேண்டும். அவருக்கு முக்கியப் பதவி வழங்க வேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது.
விஜயகாந்த்தைத் தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார் சரத்குமார். அவரது கட்சி வளர்ச்சியில் ராதிகாவும் முக்கியப் பங்காற்றி வருகிறார். சரத்குமாருக்குப் பக்க பலமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ராதிகாவுக்கும் முக்கியப் பொறுப்பு கொடுத்து அவரை கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்று மத்திய சென்னை கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை சரத்குமாரிடம் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எஸ். சுதாகர் கூறுகையில், ராதிகா சரத்குமார் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அறிமுகமானவர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். அத்துடன் கட்சியின் மாநாடு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அவர் தீவிர அரசியலுக்கு வர வேண்டும். மக்களிடையே அவருக்கு இருக்கும் பிரபல்யமும், அவருடைய செயல்திறனும் கட்சியின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நடிப்பு, நிர்வாகத்திறன் மற்றும் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து சூழ்நிலைகளையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்.
அவருடைய வருகை கட்சிக்கு மட்டுமின்றி தமிழக அரசியலுக்கும் நல்ல பலனை தரும்.
புதிதாக அரசியலுக்கு வரக்கூடியவர் அல்ல அவர். அவரது குடும்பம் அரசியல் குடும்பம். அவரது தந்தை எம்.ஆர்.ராதா தற்போதைய முதல்வருடனும் மிகவும் நெருக்கமாக இருந்தவர். பகுத்தறிவு வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பளித்து அவரை கட்சியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications