வட்டிப் பணத்தைக் கட்டாதவரின் தம்பிக்கு கத்திக்குத்து
நெல்லை: நெல்லையில் மீண்டும் கந்து வட்டி அட்டகாசம் தலை தூக்கியுள்ளது. வட்டி கட்டாதவரின் தம்பியை வட்டிக்குப் பணம் கொடுத்த கும்பல் கத்தியால் குத்தி விட்டுத் தப்பியது.
நெல்லையை சேர்ந்தவர் வரதராஜ். தொழிலதிபரான இவரிடம் என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த அருண் என்பவர் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக அவரால் வட்டியை ஒழுங்காக செலுத்த முடியவில்லை.
இதுகுறித்து வரதராஜ் தனது அண்ணன் ஆறுமுகத்திடம் கூறினார். இதையடுத்து அவர் தனது நண்பர்கள் கோபால், சரவணன் ஆகியோரை அழைத்து கொண்டு அருணை தேடி என்ஜிஓ காலனி சென்று கொண்டிருந்தார்.
அப்போது புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்ாமக் கடையில் அருணின் தம்பி சதீஸ்குமார் மது அருந்திக் கொண்டிருந்ததை பார்த்தனர்.
ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ்குமாரிடம் சென்று உனது அண்ணன் வட்டி பணம் கொடுக்கவில்லை. எனவே நீ கொடு என்றனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் சதீஷ்குமாரை கத்தியால் குத்திவிட்டு ஓடினார்.
பாரில் வைத்து வாலிபரை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து உடனடியாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நெல்லையில் மீண்டும் கந்து வட்டி அட்டகாசம் தலை தூக்கியிருப்பதை காவல்துறையினர் உடனடியாக தட்டி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications