தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம் மத குருக்கள் 'பாத்வா'!
ஹைதராபாத்: இந்தியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய அமைப்பான ஜமாயத் உமா இ ஹிந்த் அமைப்பு, தீவிரவாதத்திற்கு எதிராக 'பாத்வா' (தடை) விதித்துள்ளது. ஹைதராபாத்தில் நடந்த அந்த அமைப்பின் 29வது தேசிய மாநாட்டில் இதுதொடர்பான பிரகடனம் செய்யப்பட்டது.
89 ஆண்டு கால பழமை வாய்ந்த இஸ்லாமிய அமைப்பான ஜமாயத் உலமா இ ஹிந்த் (இந்திய உலமாக்கள் சபை) அமைப்பின் 29வது தேசிய மாநாடு ஹைதராபாத் நகரில் நடந்தது. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த உலமாக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மதத்திலிருந்து தீவிரவாதத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டில், இஸ்லாம் மதச்சார்பற்றது. அமைதியை விரும்பும் மதமாகும். இஸ்லாமுக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை. இஸ்லாமை, தீவிரவாதத்துடன் யாரும் தொடர்புப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், முக்கிய அம்சமாக, தீவிரவாதத்திற்கு எதிராக இந்த மாநாட்டில் பாத்வா பிறப்பிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தில் மாநாட்டில் கலந்து கொண்ட 6000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மத குருக்கள் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து மாநாட்டில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி மஹமூத் ஆசாத் மதானி கூறுகையில், இஸ்லாமில் தீவிரவாதத்திற்கு இடமில்லை. இஸ்லாமின் பெயரால் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபட முடியாது. குரானில் தீவிரவாதம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்றார்.
உலமாக்கள் சபையின் பொதுச் செயலாளர் ஹகிமுதீன் குவாஸ்மி கூறுகையில், குற்றவாளி யாராக இருந்தாலும், எந்த வகையிலும் அவரை எந்த மதத்துடனும் தொடர்பு படுத்த கூடாது. அந்த நபர் முஸ்லீமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி. தீவிரவாதிகளுக்கு மதங்களில் இடமில்லை.
தீவிரவாத செயல்களில் ஈடுபடும் யாரையும், எந்த மதத்துடனும் இணைத்துப் பேச முடியாது என்றார்.
நேற்றுடன் முடிந்த இந்த மாநாட்டின் இறுதியில் ஹைதராபாத் நிஜாம் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், பிற சமூகங்களைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ், ஜோசப் டிசௌசா ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குவஹாத்தியில் கூட்டுப் பிரார்த்தனை:
இதற்கிடையே, குவஹாத்தியில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இஸ்லாமிய மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட கூட்டுப் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
அக்டோபர் 30ம் தேதி குவஹாத்தியில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 84 பேர் உயிரிழந்தனர், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டங்கள் குவஹாத்தியில் நடந்தது. இதில் இந்துக்களும், முஸ்லீம்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இரு மதங்களின் புனித நூல்களிலிருந்தும் புனித வாசகங்கள் படிக்கப்பட்டன. புரோஹிதர்களும், மெளலவிகளும் அருகருகே அமர்ந்து நடத்திய இந்த கூட்டுப் பிரார்த்தனை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.
குவஹாத்தி தவிர அஸ்ஸாமில் குண்டுகள் வெடித்த பிற பகுதிகளான கோக்ரஜார், பார்பேட்டா, போன்காய்கோன் ஆகிய நகரங்களிலும் இந்த கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன.
தீவிரவாதத்தை இணைந்து வேரறுப்போம் என்றும் இந்தக் கூட்டங்களின்போது மக்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே, குவஹாத்தி புரா மஸ்ஜித் கமிட்டி, தீவிரவாதத்திற்கு எதிராக பாத்வா விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மெளலானா ஹெலால் காஷ்மி கூறுகையில், இஸ்லாமில் தீவிரவாதிகளுக்கோ, தீவிரவாதத்திற்கோ இடமில்லை. தீவிரவாதிகளை, முஸ்லீம்களுடன் தொடர்புப்படுத்த முடியாது. தீவிரவாதிகளை எந்த மதத்துடனும் தொடர்புப்படுத்த முடியாது.
இதுபோன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை தரப்பட வேண்டும். ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்புவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications