ஈழத் தமிழருக்கு நிதியா? ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அடி
ராமேஸ்வரம்: இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்களை சரமாரியாக அடித்து தனது வெறித்தனத்தைக் காட்டியுள்ளது இலங்கை கடற்படை.
இலங்கை கடற்படையினரின் வேட்டைக் காடாக தமிழக மீனவர்கள் மாறி பல காலமாகிறது. தொட்டதுக்கெல்லாம் சுடுவது, படகுகளை சேதப்படுத்துவது, மீன்களை கடலில் தூக்கிப் போடுவது, வலைகளை கிழித்தெறிவது என வெறித்தனம் செய்து வருகிறது இலங்கை கடற்படை.
இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, மத்திய அரசு, இலங்கை அரசிடம் இப்பிரச்சினையைக் கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து, இனிமேல் தமிழக மீனவர்களைத் தாக்க மாட்டோம் என இலங்கை அரசு உத்தரவாதம் அளித்தது.
ஆனால் கோடியக்கரை மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த 7ம் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி, நிர்வாணப்படுத்தி தனது வெறித்தனத்தை காட்டியுள்ளது இலங்கை கடற்படை.
ராமேஸ்வரத்திலிருந்து 2 நாட்களுக்கு முன்பு 425 படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இதில் 25 படகுகளில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பிற்பகலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.
8 படகுகளில் வந்த கடற்படையினர் துப்பாக்கி முனையில் படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் இறங்கிய கடற்படை வீரர்கள், மீனவர்களின் கைலிளை கிழித்து நிர்வாணப்படுத்தினர். சரமாரியாக துப்பாக்கிளின் பின் கட்டையால் அடித்துள்ளனர்.
பின்னர் மீன் பிடி வலைகள், ஐஸ் பெட்டிகள் உள்ளிட்டவற்றை தூக்கி கடலில் வீசினர். இரவு 9 மணி வரை இந்த சித்திரவதை நீடித்துள்ளது. நேற்று காலை மீனவர்கள் உயிர் பிழைத்து தப்பி வந்தனர்.
இந்த தாக்குதலில் மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். செல்வம் என்பவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கருப்பையா என்பவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் 5 மீனவர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் இதர பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நிதியா திரட்டிக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டு இலங்கை படையினர் தங்களை வெறித்தனமாக தாக்கியதாக மீனவர்கள் கூறியுள்ளனர். இனிமேல் நிதி கொடுக்கக் கூடாது. மீறி கொடுத்தால் அடுத்தமுறை நீங்கள் சிக்கினால் உங்களை சுட்டுக் கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள கடற்படை கொஞ்சமும் திருந்தவில்லை. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குமுறலுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications