நெல்லை டிஐஜியை மாற்ற புதிய தமிழகம் கோரிக்கை
நெல்லை: நெல்லை சரக டிஐஜியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் மாநில மாணவரனி செயலாளர் பாஸ்கர், மாநில இளைஞரணி செயலாளர் மதுரம் பாஸ்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கண்மணி மாவீரன் ஆகியோர் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, கடந்த 2ம் தேதியன்று மதுரை மாவட்டம் உத்தபுரத்திலிருந்து திரும்பிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் காரை ஒரு கலவர கும்பல் தாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இது தொடர்பாக கடந்த 4ம் தேதி கோட்டைபட்டி கிராமத்தில் சாலை மறியல் நடந்த போது துப்பாக்கி சூட்டில் சுரேஷ் என்ற வாலிபர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு குறித்து பணியில் மாவட்ட அமர்வு நிதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும். சங்கரன்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றதாக கட்சியை சேர்ந்த 7 இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொய் வழக்குகளை புதிய தமிழகம் கட்சியினர் போட்டு காவல் துறை அதிகாரிகள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே எங்கள் மீது பொய் வழக்கு புனையும் காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக நெல்லை டிஐஜி கண்ணப்பனை இடமாற்றம் செய்ய வேண்டும்.
நேர்மையான அதிகாரிகளை தென்மாவட்டங்களில் நியமனம் செய்ய வேண்டும். இல்லையேனில் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications