இந்தியாவை ஒபாமா ஒதுக்கவில்லை-பிரதமர்

கத்தாரிலிருந்து நேற்றிரவு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர்,
இந்தியாவை ஒபாமா ஒதுக்குகிறார், அதனால் தான் என்னுடன் இன்னும் பேசவில்லை என்பதெல்லாம் புரளிகள். கடந்த 8ம் தேதியே அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால், அந்தத் தொடர்பை மேற்கொள்ள (to establish contact) மிகச் சிறிய கால அவகாசமே இருந்தது. அதற்குள் எனது திட்டப்படி நான் ஓமன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக பயணத்திலேயே இருக்கிறேன். இதனால் தான் பேச முடியவில்லை. டெல்லி திரும்பிய பின் இருவரும் பேசுவோம்.
இருவரும் ஏற்கனவே மிக அன்பான கடிதங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளோம்.
அவரிடமிருந்து வந்த கடிதத்தில் அவர் இந்தியாவை எவ்வளவு மதிக்கிறார், எப்படி உறவை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார், உலக விவகாரங்களை எப்படி கையாளத் திட்டமிட்டுள்ளார் என்பதை விளக்கியுள்ளார்.
இதனால் ஒபாமாவின் காலத்தில் இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார் சிங்.
ஆனாலும் ஒபாமா பேசிய முதல் 8 நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'காஷ்மீர்'-இந்தியக் குழு அமெரிக்கா பயணம்?:
முன்னதாக காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் தான் இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஒழியும் என ஒபாமா கூறியுள்ள கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.
இது இரு நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதையடுத்து காஷ்மீர் நிலைமை குறித்து ஒபாமாவுக்கு விளக்க ஒரு குழுவை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீர் கமிட்டி ஒருங்கிணைப்பாளரும் மூத்த காங்கிரஸ் எம்பியுமான அசோக் பான் தலைமையில், திமுக எம்பி திருச்சி சிவா, சிவ சேனா எம்பி ஆனந்த் கீதே, பாஜக எம்பி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்பி பிரியா தத், சமாஜ்வாடி எம்பி ஜெயப்பிரதா, ஆர்ஜேடி எம்பி ஜபீர் ஹூசேன் ஆகியோர் கெண்ட வாஷிங்டன் செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் அமெரிக்கா பயணம்:
இதற்கிடையே சர்வதேச பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து உலகின் 20 முக்கிய நாட்டு் தலைவர்களின் (ஜி-20) கூட்டத்தை அதிபர் புஷ் வரும் 15ம் தேதி வாஷிங்டனில் கூட்டியுள்ளார்.
இதில் பங்கேற்க பிரதமர் வரும் வியாழக்கிழமை அமெரிக்கா செல்கிறார். இந்தக் கூட்டத்தில் ஒபாமா பங்கேற்காவிட்டாலும் வாஷிங்டனில் இருக்கும்போது அவரையும் பிரதமரையும் சந்தி்க்க வைக்க வெளியுறவுத்துறை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இந்தியா முக்கியமான நாடு: அமெரிக்கா
இந் நிலையில் டெல்லி வந்த அமெரிக்க வர்த்தகத்துறை துணை அமைச்சர் இஸ்ரேல் ஹெர்னான்டஸ், இந்தியாவை ஒபாமா மிக முக்கிய நாடாகக் கருதுகிறார். இதனால் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications