தலைமை நீதிபதிகள் பதவி உயர்வில் சிக்கல்
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி உட்பட 3 மாநில தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரையை பிரதமர் அலுவலகம் நிறுத்தி வைத்துவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான கங்கூலி, கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான தத்து, பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான லோதா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்து உச்ச நீதிமன்றம் பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரைந்தது.
ஆனால், மூத்த நீதிபதிகளான டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பட்நாயக், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குபாத் ஆகியோரை தவிர்த்துவிட்டு இவர்களை மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதா என எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து இந்தப் பரிந்துரையை பிரதமர் அலுவலம் சட்ட அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் இந்தப் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளார்.
சீனியாரிட்டியை புறக்கணித்துவிட்டு ஏன் இந்த நியமனங்கள் செய்யப்பட்டன என்று பிரதமர் அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வெறும் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டும் பதவி உயர்வுகள் தரப்படுவதில்லை என தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சீனியாரிட்டி என்பதும் ஒரு தகுதி தான், ஆனால் அது மட்டுமே தகுதியில்லை. திறமை உள்பட வேறு பல தகுதிகளையும் ஆராய்ந்து பார்த்துத் தான் பதவி உயர்வுகள் தரப்பட வேண்டும் என்ற கருத்தில் தலைமை நீதிபதி உள்ளார்.
மேலும் தேசிய அளவில் சீனியாரிட்டி என்ற பட்டியலே இல்லை. மாநில அளவிலான பட்டியல் தான் உள்ளது, அதை வைத்துத் தான் சீனியாரிட்டியை கணக்கிட முடியும் என்றும் கூறியுள்ளார்.
அதே போல உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இருவரை நியமித்துவிட்டால் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனியராகவே இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான். இதையெல்லாம் பார்த்துத் தான் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications