சட்டசபையில் அதிமுக-மதிமுக வெளிநடப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்காததற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி சட்டசபையில் அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டசபையில் அதிமுக துணைத் தலைவர் பன்னீர்செல்வமும் கொறடா செங்கோட்டையனும் தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னி்ல் ஜெயலலிதாவின் கார் மீது கல் வீச்சப்பட்டது குறித்த பிரச்சனையைக் கிளப்ப முயன்றனர்.
சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி தர மறுக்கவே, அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்காத திமுக அரசும் முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அவர்களை அமைதியாக உட்காருமாறு சபாநாயகர் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை அவர்கள் கேட்கவில்லை. அவர்களுடன் மதிமுக எம்எல்ஏக்களும் அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
அதே நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், புலி ஆதரவாளர்களைக் கைது செய்யக் கோரி காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட்டதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந் நிலையில் அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications