கப்பல் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு 100 கண்டெய்னர் நிவாரணப் பொருட்கள்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக 100 கண்டெய்னர் நிவாரணப் பொருட்கள் வருகிற 13ம் தேதி கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிவாரண நிதியையும், பொருட்களையும் சேகரித்து வருகிறது. இதில் நிவாரணப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய கப்பல் கழகம் (ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) மேற்கொண்டுள்ளது. அரிசி, பருப்பு, துணி வகைகள் உள்ளிட்டவை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.
100 கண்டெய்னர்களில் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். இதில் 40 அடி நீளம் கொண்ட 17 கண்டெய்னர்களும், 20 அடி நீளம் கொண்ட 83 கண்டெய்னர்களும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு கண்டெய்னரில் 20 முதல் 25 மெட்ரிக் டன் பொருட்கள் வைக்க முடியும்.
கொண்டு செல்லப்படவேண்டிய பொருட்கள் தற்போது கண்டெய்னர்களில் ஏற்றுவதற்காக கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. 12ம் தேதியன்று அனைத்து கண்டெய்னர்களும், துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படும்.
3 கப்பல்கள் மூலம் இவை இலங்கைக்கு கொண்டு செல்லப்படும். முதல் கப்பலான எம்.வி. கான்டிஜோர்க், 13ம் தேதி சென்னையிலிருந்து இலங்கை புறப்பட்டு 15ம் தேதி கொழும்பு துறைமுகத்தை சென்றடையும்.
அங்கிருந்து தமிழர் பகுதிகளுக்கு உடனடியாக பொருட்களை விநியோகிக்க இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications