தீவிர அரசியல்: ரஜினியை 'அழைத்த' அத்வானி!

பல்வேறு பிரச்சனைகளில் தேசிய கண்ணோட்டம் கொண்டுள்ள ரஜினி ஒதுங்கியிருக்கக் கூடாது என்றும் அத்வானி கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி நேற்று சென்னை வந்திருந்தார். தனது சுயசரிதையான என் தேசம்; என் வாழ்க்கை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அத்வானியின் மனைவி கமலாதேவி, மகள் பிரதீபா, துக்ளக் ஆசிரியர் சோ, பாஜக தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், மாநிலத் தலைவர் இல.கணேசன், மேலிட பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் மாலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அத்வானியுடன் கலந்து கொண்டார் ரஜினி. அவருக்கு தனது புத்தகத்தின் பிரதிகளை வழங்கிய அத்வானி, விழாவுக்கு அவர் வந்தது குறித்து பெரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
விழா முடிந்த பிறகு பேட்டியளித்த அத்வானி கூறியதாவது:
நீண்ட நாட்களாகவே சென்னைக்கு வரும்போது தனது வீட்டுக்கு வர வேண்டும் என ரஜினி அழைப்பு விடுத்து வந்தார். ரஜினி அற்புதமான மனிதர். அவரைச் சந்திக்க வேண்டும் என நானும் ஆவலுடன் இருந்தேன்.
ஆனால் அதற்கான நேரம் இப்போதுதான் வாய்த்தது.
எனக்கு அவர் மிகச் சிறப்பான தேநீர் விருந்து அளித்தார். அவர் நடித்த சிவாஜி டிவிடியின் ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய டிவிடியை எனக்கு அளித்துள்ளார். நிச்சயம் பார்ப்பேன்.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். நான் அவரிடம், 'உங்கள் நிலைப்பாடு அற்புதமானது. நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள். அதற்கு என் ஆசீர்வாதம்', என்று கூறினேன்.
வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். அது மரியாதை நிமித்தம் நான் கேட்டுக் கொண்டது. அவரைக் கட்டாயப்படுத்தவில்லை என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications