சென்னை சட்டக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!
சென்னை: சட்டக் கல்லூரியில் மாணவர் மோதலைத் தடுக்க காவல் துறையினரை அழைக்க மறுத்து, வன்முறையை வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த அறிவிப்பை அமைச்சர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று பல மணிநேரம் தொடர்ந்து மோதல் நடந்துள்ளது. ஆனால் இதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு கல்லூரி முதல்வருக்குதான் உள்ளது.
முதல்வர் அனுமதி இன்றி கல்லூரி வளாகத்துக்குள் காவல்துறையினர் நுழையக் கூடாது என அரசு உத்தரவிட்டிருப்பதால், போலீசாரும் கண்ணெதிரே நடந்த காட்டுமிராண்டித்தனத்தை கைக்கட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதற்கு முன் நடந்த கலவரங்களின்போதும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்தனர் அப்போதைய கல்லூரி முதல்வர்கள்.
நேற்றைய கலவரத்தின் போது கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ், எல்லாம் 'முடிந்த' பிறகுதான் வெளியில் தலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறையிடம் நடந்த சம்பவம் குறித்து முறையாகப் புகார் செய்வேன் என்று கடைசியில் அவர் கூறியது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட, அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்யக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது:
இந்த மோதலை உரிய நேரத்தில் தடுக்க தவறியவர் கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் என்பது உண்மைதான். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். இந்த வன்முறை தொடராத வண்ணம் தடுக்க சட்டக் கல்லூரி விடுதி மூடப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள மற்ற சட்டக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications