ரெனால்ட் கார்-பஜாஜ் பைக்குகள் உற்பத்தி குறைப்பு
மும்பை: மகிந்திரா அண்ட் மகிந்திராவும் பிரான்சின் ரெனால்ட் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் லோகன் ரக கார்களை தயாரி்த்து வருகின்றன.
சமீபத்திய பொருளாதாரத் தேக்கம் எல்லா கார் நிறுவனங்களையும் தாக்கியது மாதிரி லோகனையும் பதம் பார்த்துவிட்டது. இதன் விற்பனை பாதாளத்துக்குச் சென்றுவிட்டதால் உற்பத்தியை 5ல் 3 மடங்காகக் குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாசிக்கில் உள்ள இதன் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50,000 கார்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ரூ. 700 கோடி முதலீட்டில் உருவான இந்தத் தொழிற்சாலையில் உற்பத்து துவங்கி சுமார் 1 வருடமே ஆன நிலையி்ல் விற்பனை படுத்துவிட்டது.
இதுவரை மாதம் 2,500 கார்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் அதை 1,000 கார்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் கார் விற்பனையிலும் 7 சதவீதம் அளவுக்கு அடி விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 6 சதவீதம் குறைந்துவிட்டது.
சிக்கலில் பஜாஜ் பைக் நிறுவனம்:
இதற்கிடையே நாடு முழுவதும் பைக் விற்பனையும் படுமோசமாகியுள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்து போனது, வங்கிகளில் கடன் கிடைப்பது கஷ்டமாகிப் போனது, வேலை குறித்த எதிர்கால சந்தேகங்கள் காரணமாக பைக் வாங்குவோரும் குறைந்துவிட்டனர்.
பஜாஜ் நிறுவனத்தின் உத்தரகண்ட், புனே தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. வாரம் 7 நாட்களும் இயங்கி வந்த இதன் அவுரங்காபாத் தொழிற்சாலை மாதத்துக்கு 2 நாள் மூடப்படவுள்ளது.
ஏராளமான பைக்குகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் இந்த நிறுவனத்தின் வி்ற்பனை 34 சதவீதம் படுத்துவிட்டது.
ரூ. 8 லட்சம் விலை குறைத்த ஹோண்டா:
இந் நிலையில் ஹோண்டா கார் நிறுவனம் தனது புதிய சிவிக் காரின் விலையை தடாலடியாக ரூ. 8 லட்சம் குறைத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த ஹைபிரிட் கார் இரு மாதங்களுக்கு முன் இந்தியாவில் ரூ. 21.5 லட்சம் விலையுடன் சந்தைக்கு வந்தது. ஆனால், வாங்க ஆள் இல்லாததால் வெறும் 60 கார்களே விற்றன. இதையடுத்து இதன் விலையை ரூ. 13.3 லட்சமாகக் குறைத்துள்ளது ஹோண்டா.












Click it and Unblock the Notifications