மாணவர் மோதலை தடுக்காதது ஏன்? போலீஸுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்களை இன்னொரு பிரிவு மாணவர்கள் கொலை வெறியுடன் தாக்கியபோது அதை ஏன் போலீஸார் தடுக்கவில்லை என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுவாமிநாதன், ஸ்டான்லி உள்ளிட்ட 6 வக்கீல்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர், போலீஸார், கல்லூரி முதல்வர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
சட்டக் கல்லூரியில் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க கல்வியாளர்கள், வக்கீல்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்குமாறு பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தும் அதை போலீஸார் செவிமடுக்காதது ஏன். மாணவர்கள் அடிபடுவதை தடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications