கோவையில் அண்ணா நூற்றாண்டு விழா - கருணாநிதி பங்கேற்பு
கோவை: கோவையில் திமுக சார்பில் இன்று அண்ணா நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.
திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் சார்பில் கோவையில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக இன்று காலை முதல்வர் கருணாநிதி கோவை வந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை வட கோவை சிவானந்தா காலனியில் அண்ணா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்.
மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநில அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், பரிதி இளம் வழுதி, துரைமுருகன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
முதல்வர் கருணாநிதி சிறப்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவையில் இரவு தங்கும் முதல்வர் நாளை காலை சென்னை திரும்புகிறார்.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.












Click it and Unblock the Notifications