சென்னையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் உண்ணாவிரதம்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்த் திரையுலகம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
முதலில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
பின்னர் திரைப்படத் தொழிலாளர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய், தானும், தனது ரசிகர்களும் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜய் தனது தாயார் ஷோபா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புடை சூழ உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 5000க்கும் மேற்பட்ட ரசிகர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து எஸ்.ஏ.சந்திரேசகர் பேசுகையில், தமிழ் உணர்வுடன் இந்தப் போராட்டம் நடக்கிறது. விஜய்யைக் காண இங்கு ரசிகர்கள் வரவில்லை. மாறாக தமிழன் என்ற உணர்வுடன் திரண்டுள்ளனர்.
பிற மொழிப் படங்களில் நடிப்பதில்லை, தமிழில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் உள்ளார் விஜய். இன உணர்வுள்ள தமிழனாக திகழ்கிறார் விஜய். இதனால்தான் இலங்கைப் படுகொலையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறார் என்றார்.
பத்தரை மணியளவில் விஜய் தனது தாயாருடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். கருப்பு நிற உடையுடன் விஜய் பங்கேற்றார். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ரசிகர்களும் பெரும்பாலும் கருப்பு நிற உடையில் வந்திருந்தனர்.
விஜய் மற்றும் ரசிகர்களை இயக்குநர்கள் பேரரசு, செல்வபாரதி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உண்ணாவிரதம் குறித்து விஜய் கூறுகையில், எனது ரசிகர்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதையடுத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 37 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
சினிமாவை தாண்டி இப்படி உணர்வுள்ள ரசிகர்கள் எனக்கு கிடைத்திருப்பது பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது.
இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்றார்.
விஜய் உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications