மாணவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: பெற்றோர்கள் எவ்வளவோ சிரமத்திற்கு இடையில் தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். எனவே மாணவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் வன்முறையில் இறங்கக் கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சந்திராயன் விண்கலம் நிலவில் தேசியக் கொடி நாட்டியுள்ளதை கண்டு ஒருபுறம் அனைவரும் பெருமிதம் அடைகிறோம். மறுபுறத்தில், மண்ணில் நடந்த, சட்டக் கல்லூரி சம்பவத்தை கண்டு எத்தகைய எதிர்காலத்தைச் சந்திக்க இருக்கிறோம் என்கிற பொழுது ஏக்கப் பெருமூச்சு வெளிப்படுகிறது.
21ம் நூற்றாண்டில், சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சம உரிமையும், சம வாய்ப்பும் கொண்ட ஒரு நவீன சமுதாயம் அமைய வேண்டும் என்று நல்லோர்கள் வற்புறுத்தி வருகின்றனர். குறிப்பாக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அத்தகைய புதிய இளைஞர் சமுதாயம் உருவாக வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
இந்தியா ஒரு வல்லரசாக மட்டுமல்ல, நல்லரசாகவும் விளங்க வேண்டும் என்றால் பரந்த உள்ளத்தோடும், தொலை நோக்கோடும் பணியாற்றக் கூடிய இன்றைய இளைஞர்களால்தான் முடியும். அதுவும் குறிப்பாகப் படித்த இளைஞர்கள் கையில்தான் உள்ளது.
தங்கள் சுய நலத்திற்காக சாதி, மதங்களைப் பயன்படுத்தும் போலியான சமூகத்த தலைவர்களையும், அரசியல் ஆதாயத்திற்காக தூண்டி விடும் சந்தர்ப்பவாதிகளையும் மாணவர்கள் அடையாளம் கண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பெற்றோர்கள் எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையில், தங்கள் பிள்ளைகளை கல்லூரிப் படிப்புக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த பதவி வகிக்க வேண்டும் என்று அந்த உள்ளங்கள் ஆசைப்படுகின்றன. இவற்றையெல்லாம் கருதித்தான் இன்றைய இளைஞர்கள் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். எக்காரணத்தைக் கொண்டும் வன்முறையைக் கையாளக் கூடாது என்றும் வற்புறுத்தி வருகிறேன்.
விசாரணைக் கமிஷன் நியமித்ததாலேயே பிரச்சினைகள் தீர்ந்து விட்டது என்று தமிழக அரசு கருதாமல், சமுதாயத்தில் புரையோடிப் போன சாதி, மத வெறியைத் தகர்க்கும் வகையில், தக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பதுதான் இன்றைய கேள்வி என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications