சந்திராயன் திட்ட இயக்குநர் அண்ணாதுரைக்கு பாராட்டு விழா

இந்தியாவின் முதல் நிலவுப்பயணமான சந்திராயன்-1 வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் அண்ணாதுரை மயில்சாமி.
இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். சந்திராயன் திட்ட வெற்றியால் கோதவாடி கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து கோதவாடி ஊர் மக்கள் சார்பில் அண்ணாதுரைக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மைதானத்தில் இதற்கான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில், மனைவி வசந்தி, தந்தை மயில்சாமி, தாயார் பாலசரஸ்வதி, தம்பி மோகன சுந்தரம் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டார் அண்ணாதுரை.
மெயின் ரோட்டிலிருந்து ஊர் வரை நடந்தே வந்தார் அண்ணாதுரை. அவருக்கு மாலை அணிவித்து ஊர் மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் தான் படித்த பள்ளியில் அண்ணாதுரை தேசியக் கொடியேற்றி வைத்து சல்யூட் செய்தார். பிறகு பார்வையாளர் குறிப்பேட்டில், எனக்கு, அ, ஆ சொல்லிக் கொடுத்த எனது அருமை ஆரம்பக் கல்வி நிலையத்திற்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்கள் என்று தமிழில் எழுதி தமிழில் கையெழுத்திட்டார்.
பிறகு குத்துவிளக்கேற்றி வைத்தார். அதன் பின்னர் பாராட்டு விழா தொடங்கியது. விழாவின்போது தனது சொந்த செலவில், ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு இலவசமாக ஒரு கம்ப்யூட்டரையும் அண்ணாதுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications